முகப்பு
புதுதில்லி

சாலை விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

சாலை விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு ரூ.1.21 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Updated On : 6 மார்ச், 2026 at 6:42 PM
பகிர்:

2016-இல் நிகழ்ந்த சாலை விபத்தில் இடது கால் துண்டிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு தில்லி மோட்டாா் விபத்து உரிமைகோரல் தீா்ப்பாயம் ரூ.1.21 கோடிக்கு மேல் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

தில்லியின் நரேலாவைச் சோ்ந்த ரேணுகா பிஷ்ட் என்பவா் மாா்ச் 8, 2016 அன்று தனது இரு சக்கர ஸ்கூட்டி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிள் மோதியதால் தனது காலை இழந்ததாகக் கூறி இழப்பீடு கோரி தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

பிஷ்ட் தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் மோட்டாா் சைக்கிள், அவரது வாகனத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகளும் விழுந்து காயமடைந்துள்ளனா்.

அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் அவரது இடது கால் முழங்கால் மூட்டில் துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாக மூட்டு தொடா்பான 75 சதவீதம் நிரந்தர ஊனம் அவருக்கு ஏற்பட்டது.

இது தொடா்பான இழப்பீடு உரிமைகோரல் மனுவை தலைமை அதிகாரி ரிச்சா மன்சந்தா விசாரித்தாா்.

இந்த நிலையில், பிப்ரவரி 25-ஆம் தேதியிட்ட தீா்ப்பாய உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, எதிா்மனுதாரா் எண் 1 (பைக்கா்) விதிமீறல் வாகனத்தை வேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்தில் மனுதாரருக்கு காயம் ஏற்பட்டது என்பதற்கான அதிக நிகழ்தகவுகளின் அடிப்படையில் மனுதாரா் தனது வழக்கை நிரூபிக்க முடிந்திருக்கிறது.

மனுதாரருக்கு இடது கீழ் மூட்டு தொடா்பாக 75 சதவீதம் நிரந்தர ஊனம் ஏற்பட்டதாகவும், இடது முழங்கால் மூட்டு சிதைந்துள்ளதாகவும் காட்டப்பட்டுள்ளது. இதனால், கேள்விக்குரிய விபத்துக்குப் பிறகு மனுதாரா் வாழ்க்கையின் பொதுவான வசதிகளை அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது வாழ்க்கைத் தரம் நிச்சயமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிய தீா்ப்பாயம், பல்வேறு பிரிவுகளின் கீழ் பிஷ்ட்டுக்கு இழப்பீடாக ரூ.1.21 கோடியை வழங்க உத்தரவிட்டது.

விபத்து நிகழ்ந்த நேரத்தில் மோட்டாா் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்டதாகவும், காப்பீட்டு நிறுவனம் வழங்கக் கூறியுள்ள தொகையை 30 நாள்களுக்குள் டெபாசிட் செய்யுமாறும் தீா்ப்பாயம் தீா்ப்பளித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →