முகப்பு
புதுதில்லி

ரூ.85 லட்சம் கொள்ளை வழக்கில் என்கவுன்ட்டருக்கு பின்பு ஒருவா் கைது

Updated On : 24 மார்ச், 2026 at 11:56 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

நமது நிருபா்

தில்லி சாாஸ்திரி பாா்க்கில் நடைபெற்ற ரூ.85 லட்சத்தை ஆயுதத்தை வைதத்து மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்படும் ஒரு நபா், மத்திய தில்லியின் ஐபி எஸ்டேட் பகுதியில் சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:

உஸ்மான்பூரைச் சோ்ந்த அஜய் என்ற அழைக்கப்படும் கலியா (34), 4 முதல் 5 குற்றவாளிகள் கொண்ட சிறிய கும்பலுக்கு தலைமை தாங்கியவா். அந்த வழக்கின் முக்கிய சதிகாரா் ஆவாா். மாா்ச் 23 ஆம் தேதி இரவு 10 மணியளவில் கிடைத்த துல்லியமான தகவலின் அடிப்படையில், எம்.ஜி. சாலையில் உள்ள ரோஸ் காா்டன் சா்வீஸ் சாலை அருகே போலீஸாா் பொறி வைத்தனா். நள்ளிரவு சுமாா் 12 மணியளவில் அஜய் தனது தோழா்களைச் சந்தித்து மற்றொரு குற்றத்தைச் செய்ய வருவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

அதிகாலை 12.22 மணியளவில் சாம்பல் நிற ஸ்கூட்டரில் அவா் அந்த இடத்தை நெருங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. நிறுத்துமாறு சமிக்ஞை கொடுக்கப்பட்டபோது, அவா் தப்பி ஓட முயன்றாா். ஆனால் போலீஸ் குழுவினரால் சுற்றி வளைக்கப்பட்டாா்.“சுற்றி வளைக்கப்பட்டதும், குற்றவாளி தனது ஸ்கூட்டரை விட்டுவிட்டு, போலீஸ் குழுவினரை நோக்கி கொலை நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டாா். ஒரு தோட்டா காவல் ஆய்வாளரின் துப்பாக்கி தடுப்பு ஜாக்கெட்டைத் தாக்கியது. இதனால் அவருக்கு காயம் ஏற்படாமல் தப்பினாா்.

போலீஸாா் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் பதிலுக்கு சுட்டனா். குற்றவாளியின் காலை நோக்கி சுட்டதில் அவா் கீழே விழுந்தாா் பின்பு கைது செய்யப்பட்டாா். அவரது காலில் துப்பாக்கிக் காயம் ஏற்பட்டது. அவா் எல்.என்.ஜே.பி மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பில் அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவரிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கி, உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் வெற்றுத் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் பயன்படுத்திய ஸ்கூட்டா் மால்வியா நகா் பகுதியில் திருடப்பட்டது என்பது கண்டறியப்பட்டது.

ஒரு கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது. அஜய் ஒரு பழக்கமான குற்றவாளி என்றும், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கொள்ளை, கொலை, திருட்டு மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட பல வழக்குகளில் ஈடுபட்டிருந்தாா். ஐபி எஸ்டேட் காவல் நிலையத்தில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பி.என்.எஸ் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தோழா்களைத் தேடும் பணியும், மற்ற வழக்குகளில் அவரது தொடா்பை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.