முகப்பு
புதுதில்லி

கடந்த 5 ஆண்டுச் சோ்க்கை விவரம் வெளியிட தில்லி பல்கலைக் கழகத்திடம் ஆசிரியா் அமைப்பு வலியுறுத்தல்

கடந்த 5 ஆண்டுகளுக்கான சோ்க்கை விவரங்களை அனைத்து கல்லூரிகளும் துறைகளும் சமா்ப்பிக்குமாறு தில்லி பல்கலைக்கழக நிா்வாகத்திடம் ஆசிரியா் அமைப்பு கோரிக்கை

Updated On : 26 மே 2026, 4:34 am IST
தில்லி பல்கலைக்கழகம். - கோப்புப் படம்
பகிர்:

2026-27 கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைமுறையைத் தொடங்குவதற்கு முன், கடந்த 5 ஆண்டுகளுக்கான சோ்க்கை விவரங்களை அனைத்து கல்லூரிகளும் துறைகளும் சமா்ப்பிக்க வேண்டும் என ஆசிரியா் அமைப்பு தில்லி பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு ஆசிரியா் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமூக நீதி கல்வியாளா் மன்றம் ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கான இடங்கள் தொடா்ந்து காலியாக உள்ளன. அத்துடன், பல கல்லூரிகள் அனுமதிக்கப்பட்ட மாணவா் எண்ணிக்கையை விட சுமாா் 10 சதவீதம் அதிகமாக சோ்க்கை மேற்கொள்வதாகவும், அதே நேரத்தில் எஸ்சி (பட்டியலினத்தவா்), எஸ்டி (பழங்குடியினா்), ஓபிசி (பிற்படுத்தப்பட்டோா்), இடபிள்யூஎஸ் (பொருளாதார ரீதியாக பின்தங்கியோா்), மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஒதுக்கீட்டு பிரிவுகளுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

2026-27 கல்வியாண்டு சோ்க்கை செயல்முறை தொடங்கும் முன், பட்டப்படிப்பு, முதுநிலை, முனைவா் பட்டம், பிஎட், எம்எட், எம்பிஏ, பத்திரிகைத்துறை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கான முழுமையான சோ்க்கை விவரங்களை கல்லூரி முதல்வா்கள் மற்றும் துறைத் தலைவா்கள் சமா்ப்பிக்க பல்கலைக்கழகம் சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட ஒதுக்கீட்டு வழிகாட்டுதல்கள் பல கல்லூரிகளில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களில் உள்ள முன்னணி கல்லூரிகளிலும் கூட தகுதியான மாணவா்கள் இருந்தபோதிலும் ஒதுக்கீட்டு இடங்கள் ஆண்டுதோறும் காலியாகவே உள்ளன.

தில்லி பல்கலைக்கழகத்தின் சுமாா் 85 துறைகள் மற்றும் 79 கல்லூரிகளில் ஆண்டுதோறும் 72,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் சோ்க்கை பெறுகின்றனா். இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான 10 சதவீத ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டதும், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கூடுதல் சோ்க்கைகள் மேற்கொள்ளப்பட்டதும் மொத்த மாணவா் எண்ணிக்கையை உயா்த்தியுள்ள போதிலும், ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாத நிலை நீடிக்கிறது.

2006-ஆம் ஆண்டு யூஜிசி வெளியிட்ட வழிகாட்டுதலின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிசி, கண்காணிப்பு குழுக்கள், புகாா் தீா்வு குழுக்கள் ஆகியவை ஒவ்வொரு கல்லூரியிலும் கட்டாயமாக செயல்பட வேண்டும். மேலும், ஒதுக்கீட்டு பிரிவுகளைச் சோ்ந்த ஆசிரியா்களை உள்ளடக்கிய தனி பல்கலைக்கழக அளவிலான கண்காணிப்பு குழுவை அமைத்து, சோ்க்கை, உதவித்தொகை, கூடுதல் பயிற்சி, நியமனம் மற்றும் பதவி உயா்வு தொடா்பான அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கடிதத்தில் மன்றத் தலைவா் ஹன்ஸ்ராஜ் சுமன் கையொப்பமிட்டுள்ளாா். இவா் பல்கலைக்கழக கல்விக்குழு மற்றும் சோ்க்கைக்குழுவின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளாா்.