ஆலங்குளத்தில் கருவூலம் அமைக்கப்படுமா?
ஆலங்குளம், பிப். 1: திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலங்குளம், தனித் தாலுகாவாகி சுமார் 12 ஆண்டுகள் ஆகியும், ஆலங்குளத்தில் இன்னும் கருவூலம் அமைக்கப்படவில்லையே என்ற ஏக்க
ஆலங்குளம், பிப். 1: திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலங்குளம், தனித் தாலுகாவாகி சுமார் 12 ஆண்டுகள் ஆகியும், ஆலங்குளத்தில் இன்னும் கருவூலம் அமைக்கப்படவில்லையே என்ற ஏக்கமும், ஆதங்கமும் பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.
ஆலங்குளம் தாலுகாவின் கீழ், புதுப்பட்டி, வெங்கடாம்பட்டி, கீழப்பாவூர், ஆலங்குளம், நெட்டூர் ஆகிய 5 குறுவட்டங்களும், 35 வருவாய் கிராமங்களும் உள்ளன.
ஆலங்குளம் தாலுகாவில் வட்டாட்சியர், சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், 5 வருவாய் ஆய்வாளர்கள், 33 கிராம நிர்வாக அலுவலர்கள், 35 கிராம உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆலங்குளம் தாலுகா மூலம், ஆலங்குளத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராம மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அரசு பணிகளுக்காக, ரூ.10- க்கு கருவூல செலுத்துச் சீட்டு கட்ட வேண்டும் என்றால்கூட சுமார் 25 முதல் 50 ரூபாய் வரை செலவழித்து, வி.கே.புதூர் கருவூலம் செல்ல வேண்டும்.
இதன் மூலம் அவர்கள் தங்கள் சொந்த பகுதியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிற்கு செல்ல வேண்டி உள்ளது. ஒரே நாளில் பணி முடியாமல், கூடுதலாக ஒருநாள் அலைய வேண்டிய சூழல் வரும்போது, அவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
ஒருபகுதியில் தனித்தாலுகா இருந்தாலே அந்த பகுதியில் கருவூலம் அமைக்கலாம். ஆனால், ஆலங்குளத்தில் தனித்தாலுகா உருவாக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகள் ஆகியும், கருவூலம் அமைக்கப்படவில்லை.
இந்த கட்டடத்தின் மாடியில், கருவூலம் அமைக்க தேவையான அளவிற்கு இட வசதி உள்ளது. அதோடு புதிய கட்டடம் கட்ட வேண்டுமானாலும், தாலுகா அலுவலகம் அருகே போதுமான இடம் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் தனிக்கட்டடமும் கட்டிக் கொள்ள முடியும். அருகிலே கனராவங்கியும் உள்ளது.
ஆலங்குளம் தாலுகா அலுவலக கணக்குகள் இந்த கனரா வங்கி மூலமே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. இதே பகுதியில் கருவூலம் அமைப்பதன் மூலம், பொதுமக்கள் கருவூலத்தில் செலுத்துச்சீட்டை நிரப்பி கையெழுத்து வாங்கி, அருகில் உள்ள கனரா வங்கியில் செலுத்த வசதியாக இருக்கும்.
இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல், பணவிரயம், மன உளைச்சல் தவிர்க்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆலங்குளத்தில் கருவூலம் அமைக்க உத்தரவிட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் அ.பால்ராஜ் கூறியது:
ஆலங்குளத்தில் சார்நிலை கருவூலம் அமைய வேண்டிய கட்டாய சூழல் உருவாகி உள்ளது. ஆலங்குளத்தில் புதிதாக சார்நிலை கருவூலம் அமைக்க மாவட்ட கருவூல அதிகாரியால், ந.க.அ1147032006, நாள் 20.07.06 ன்படி பரிந்துரை செய்யப்பட்டு, சென்னை கருவூலத்துறை, சிறப்பு ஆணையருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
எனவே, ஆலங்குளத்தில் கருவூலம் அமைய அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றார் அவர்.