முகப்பு
திருநெல்வேலி

அடிப்படை வசதிகள் செய்யப்படாத சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் சீரமைக்கப்படுமா?

கன்னியாகுமரி, ஜூன் 15: கன்னியாகுமரியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம். இந்த துறைமுகத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளதால் மீனவர்

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:19 PM
பகிர்:

கன்னியாகுமரி, ஜூன் 15: கன்னியாகுமரியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம். இந்த துறைமுகத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் உள்ளதால் மீனவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

  350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் இந்த துறைமுகத்தில் இருந்து 10,000-த்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இது தவிர ஏஜென்ட்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

  இங்கு பிடித்து வரப்படும் மீன்கள் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காக இங்கு பெரிய அளவிலான 5 தொழிற்கூடங்கள் அமைந்துள்ளன.

  வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் மீன்கள் மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. மீன்பிடி சீசன் காலங்களில் மாலை 5 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலும் துறைமுகம் களை கட்டி காணப்படும். மீன்களை ஏற்றிச் செல்ல நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

  ஆனால், இந்த துறைமுகம் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவது மீனவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாதவபுரம் சந்திப்பில் இருந்து ஒற்றையால்விளை ஊர் சாலை வழியாகத்தான் வாகனங்கள் துறைமுகத்துக்கு வந்து செல்கின்றன.

  இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை தரமானதாக மாற்ற வேண்டும். அல்லது கன்னியாகுமரியில் இருந்து துறைமுகத்துக்குச் செல்ல தனிசாலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

  மேலும், துறைமுக நுழைவு வாயிலில் இருந்து படகு தளத்துக்குச் செல்லும் சாலை பழுதடைந்து உள்ளது.

இதனால், மழைக் காலங்களில் குண்டு, குழிகளில் நீர் தேங்கி துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இதனை துப்புரவு செய்யாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   துறைமுக வளாகம் முழுவதிலும் உள்ள மின் கம்பங்களில் தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை.

இது தவிர மீன் உலர் மையம், குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, மருத்துவ வசதி, தங்கும் இடம் என எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாதது மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  விசைப் படகுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால் படகு தளம் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.

தற்போது படகுகள் நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஒன்றுடன் ஒன்று மோதி அடிக்கடி படகுகள் சேதமடையும் நிலை இருந்து வருகிறது.

   இந்த துறைமுகத்தின் மூலம் அரசுக்கு அதிகளவு வருவாய் கிடைத்து வருவதால் சிறந்த முறையில் பராமரித்து தொழில்வளத்தை மேலும் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மீனவர்களின் விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.