முகப்பு
திருநெல்வேலி

இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் ஷட்டர் பழுதால் வீணாகும் தண்ணீர்

கோவில்பட்டி, நவ. 8: விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் மூடப்பட்டுள்ள ஷட்டர் வழியாக பெருமளவு நீர் வெளியேறுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி எட்டையபுரம் வட்டார விவசாயிக

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:58 PM
பகிர்:

கோவில்பட்டி, நவ. 8: விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் மூடப்பட்டுள்ள ஷட்டர் வழியாக பெருமளவு நீர் வெளியேறுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி எட்டையபுரம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 வைப்பாறும், அர்ஜுனா நதியும் சங்கமிக்கும் இடமான விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடியில் நீர்த்தேக்கம் ரூ. 80 கோடி மதிப்பில் தேசிய வேளாண் வளர்ச்சி வங்கி உதவியுடன் 2006-ல் கட்டி முடிக்கப்பட்டது.

 தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், புதூர் வட்டாரத்தின் மேற்குபகுதியான அயன்ராஜாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, அயன்வடமலாபுரம், தாப்பாத்தி உள்ளிட்ட 11 கிராமங்களிலுள்ள மானாவாரி நிலங்களை பாசன வசதி கொண்ட நிலங்களாக மாற்ற இந்த நீர்த்தேக்கம் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

 இருப்பினும், நீர்த்தேக்கத்தின் உள்பகுதியில் சாத்தூரிலிருந்து இருக்கன்குடி வழியாக மேலக்கரந்தைக்கு செல்லும் பாலம் இருந்ததால், உடனடியாக தண்ணீர் தேக்க முடியவில்லை.

 அணையில், தண்ணீர் தேக்கும் போது, மேற்கண்ட பாலம் நீரில் மூழ்கிவிடும். இதனால், முற்றிலும் போக்குவரத்து தடைபடும் நிலை ஏற்பட்டது.

 இதை கருத்தில் கொண்டு, அணையின் உள்பகுதியில் உயரமான புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

 அதன் பின் இரண்டு ஆண்டு காலமாக போதிய மழை இல்லாததால், நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர்வரத்து இல்லை.

 தற்போது, இந்த ஆண்டிலாவது பருவ மழைக்கு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டையபுரம் வட்டார விவசாயிகள் விருதுநகர் மாவட்ட பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு முதன்மைப் பொறியாளருக்கு கோரிக்கை விடுத்தனர்.

 அதன் அடிப்படையில் பருவமழைக்கு நீர்த்தேக்கத்திலுள்ள 21 ஷட்டர்களையும் அடைத்து, தண்ணீர் தேக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 இந்நிலையில், 24 அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போது பெய்து வரும் மழைக்கு 11 அடி தண்ணீர் தேங்கியுள்ளது.

 இன்னும் மழைக் காலம் உள்ளதால், இந்த ஆண்டு தண்ணீர் பெருகிவிடும் என்ற நம்பிக்கையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.

 இருப்பினும், நீர்த்தேக்கத்தின் ஷட்டர் சரிவர மூடாததால், உள்புறம் இருந்து பெருமளவு தண்ணீர் வீணாக ஆற்றுக்கு செல்கிறது. இதனால், யாருக்கும் பயனில்லை.

 விருதுநகர் மாவட்டத்தில், நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தாலும், இதன் பயன் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு உள்ளது.

 இந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேக்கப்பட்டால், இருக்கன்குடியிலிருந்து வேம்பார் வரையிலான சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னை தீரும்.

 200-க்கும் மேற்பட்ட விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். சுமார் 10 ஆயிரத்து 500 ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் தோட்ட பாசனங்களும் பயன்பெறும்.

 எனவே, மேற்கண்ட ஷட்டரிலிருந்து வீணாக தண்ணீர் வெளியேறுவதை உடனடியாக அடைக்க வேண்டும்.

 அணைக்கட்டில் பழுதடைந்துள்ள ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டையபுரம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments