புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாமில் வாக்குப் பதிவு தொடங்கியது
கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
கேரளம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.
பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி (30 தொகுதிகள்): யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் காண்பதால் இங்கு கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 9.50 லட்சம் வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.
Advertisement
கேரளம் (140 தொகுதிகள்): கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.
அஸ்ஸாம் (126 தொகுதிகள்): அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. இவர்களை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி களம் காண்கிறது.
மே 4-இல் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
கேரளம், அஸ்ஸாம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.