திருநெல்வேலி

விளம்பர பிரியர்களின் "வாரச் சந்தை'யாகும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருநெல்வேலி, பிப். 21: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு சுயநலவாதிகள் மற்றும் விளம்பர பிரியர்களின் வருகை நாளு

ப. இசக்கி

திருநெல்வேலி, பிப். 21: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு சுயநலவாதிகள் மற்றும் விளம்பர பிரியர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்த காவல் துறையினரும் தயக்கம்காட்டி வருவதால் அந்த இடம் கட்டுப்பாடற்ற பகுதி போலவும் காட்சி அளிக்கிறது.

 பொதுமக்கள் தங்களின் நியாயமான குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெற்றுக் கொள்ள வசதியாக ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.

 இங்கு ஆட்சியரிடம் மனு அளிக்க வருவோர் முதலில் மனுவை பதிவு செய்து பின்னர் ஆட்சியரிடம் அளிப்பார்கள். மனுவை பெறும் ஆட்சியர் அதை பரிசீலித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பார்.

  மிக முக்கியமான பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் அங்கு இருக்கும் அதிகாரியை அழைத்து உடனே விவரத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிடுவார்.

 (முன்பெல்லாம் இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் சிலர் வருவதில்லை. அவர்களுக்குப் பதிலாக கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பி வைப்பார்கள். இம் மாவட்ட ஆட்சியராக மு. ஜெயராமன் பொறுப்பேற்ற பின்பு அத்தகைய அதிகாரிகளைக் கடிந்து கொண்டதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டார். அதனால் இப்போது பெரும்பாலான அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு வந்து விடுகின்றனர்.)

 இந்தக் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு கிராம மக்கள் அதிகமானவர்கள் வந்து மனுக் கொடுப்பதுண்டு. குடிநீர், சாலை வசதி, கழிவு நீரோடை, பஸ் வசதி, அரசின் இலவச டி.வி., சமையல் எரிவாயு அடுப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா போன்றவற்றுக்கான மனுக்கள் அதிகம் வருகின்றன.

  பொதுஇடம் ஆக்கிரமிப்பு, சாதி மோதல் சூழ்நிலை போன்ற பிரச்னைகள் குறித்தும் பொதுமக்கள் மனுக்களை அளிப்பதுண்டு.

 சுயநல கும்பல்: அண்மைக் காலமாக ஆட்சியரிடம் மனுக் கொடுக்க சிலர் கிராம மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வருகின்றனர். சிலர் வாகனங்களிலும் அழைத்து வருகின்றனர். அவ்வாறு அழைத்து வரும் நபர் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த உடன் அங்கு நிற்கும் ஊடக பிரதிநிதிகளை அணுகி முதலில் அவர்களிடம் மனுக்களை அளிக்கின்றனர். பின்னர் தாம் அழைத்து வந்தவர்களை ஒன்று கூட வைத்து அவர்களும் முன்னாள் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

  அதன் பின்பு அவர்கள் அந்த மனுவை ஆட்சியரிடம் கொடுப்பார்களா, இல்லை என்பது தெரியாது. விழிப்புணர்வு இல்லாத கிராம மக்களை அழைத்து வந்து அவர்கள் பயன்பெற உதவுவதில் தவறு காண முடியாது.

  ஆனால், சிலர் அவ்வாறு கிராம மக்களை வாகனங்களில் அழைத்து வரவும், ஆட்சியரிடம் மனுக் கொடுக்கவும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவரவும் எனக் கூறி கணக்குப்போட்டு ஆளுக்கு ஒரு தொகையை வசூல் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

  இந்த வேலையை அந்த ஊரில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவரோ அல்லது தொண்டு நிறுவன பிரதிநிதி எனக் கூறி கொள்பவரோ அல்லது ஏதேனும் ஒரு "விவரம் தெரிந்த நபர்' மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.

 இன்னும் சிலர், அரசு நலத்திட்ட உதவிகளில் ஏதேனும் ஒன்றைக் கூறி ("லேட்டஸ்ட்' வீட்டுமனைப் பட்டா) அதை உடனே பெற்றுத் தருவதாக அழைத்து வந்து அவர்களை முன்னிறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஒரு மினி பேரணியை நடத்தி, கோஷம் போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இயக்கப் பணியை செய்யும் விளம்பர பிரியர்களும் அதிகரித்து வருகின்றனர்.

  கடந்த சில வாரங்களில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனுக் கொடுத்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 8 ஆயிரத்தை தாண்டும் என்கின்றனர் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்.

  காவல்துறை அலட்சியம்: கடந்த 1999-ல் நடைபெற்ற தாமிரபரணி சம்பவத்தையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் பேரணியோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என மாநகர காவல்

துறையினர் தடை விதித்துள்ளனர்.

  ஆனால், இன்னமும் திங்கள்கிழமைகளில் சில அமைப்பினர் அங்கு திடீர் பேரணிகளையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அங்கு எவ்வித கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் அதை கண்டு கொள்வதில்லை.

  மாறாக, சில வேளைகளில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்து அழைத்து சென்று மனுக் கொடுக்க வைக்கின்றனர். இந்த விதிமுறை மீறலுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதால் சில அரசு ஊழியர் சங்கங்கள் கூட இப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே போராட்டங்களை நடத்த துணிந்துள்ளனர்.

  இதன் வெளிப்பாடாக, திங்கள்கிழமை யாதவர் அரசியல் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் தான் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க போவதாக அறிவித்தார்.

  இதையறிந்த, மாநகர காவல்துறை துணை ஆணையர் அவினாஷ்குமார் தலைமையில் போலீஸôர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து வாசல்களிலும் காலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெகு நேரத்துக்கு பின்பு நான்கைந்து பேருடன் ஆட்டோவில் வந்து இறங்கிய அந்த நபர் எதுவும் அறியாதவர் போல கையைத் தூக்கி அங்கு நின்ற பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு "போஸ்' கொடுத்துவிட்டு தனது கோரிக்கை மனுவை ஆட்சியருக்கு தபாலில் அனுப்பி விட்டதாக கூறிவிட்டு "ஹாயாக' சென்று விட்டார்.

  அத்தனை நேரம் அங்கு வேகாத வெயிலில் காத்துநின்ற காவல்துறை அதிகாரிகள் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல அவர்களும் சென்று விட்டனர். இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒரு முடிவு கட்ட வேண்டாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT