தலக்குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கன்னியாகுமரி, நவ.19: கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அகஸ்தீசுவ
கன்னியாகுமரி, நவ.19: கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அகஸ்தீசுவரம், தென்தாமரைக்குளம் ஆகிய இரு பேரூராட்சிகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது தலக்குளம். சுற்றிலும் இருபுறமும் உயர்ந்து வளர்ந்த தென்னை மரங்களுடன் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் நீள வடிவில் அமைந்துள்ளது இக் குளம், செடி, கொடிகள் படராமல் கேரளத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது தனிச் சிறப்பு.
÷குளத்தின் பின்னணியில் அழகான மலை, சுற்றிலும் வயல்வெளிகள் அமைந்துள்ள இங்கு, படகு சவாரிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்குநாள் சுற்றுலாப் பயணிகளிடம் அதிகரித்துள்ளது.
÷கன்னியாகுமரியில் இருந்து நீரோடி செல்லும் கோவளம் கடற்கரையை ஒட்டிய பகுதியில் இக் குளம் அமைந்துள்ளதுடன் மாவட்டத்தின் கடைசிக் குளம் என்ற சிறப்பையும் பெறுகிறது.
÷எப்போதும் நீர் நிரம்பிக் காணப்படும் இக் குளத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள், உயர்நிலைப் பாலம் அமைக்கப்பட்டு 15.10.10-ல் புதிய வடிவில் திறக்கப்பட்டது.
÷இரு பேரூராட்சிகளின் எல்லைப் பகுதியில் இக் குளம் அமைந்துள்ளதால், படகு சவாரி திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இரு பேரூராட்சிகளுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
÷படகு சவாரி, படகு இல்லம் கொண்டு வரும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை இணைந்து ஈடுபட்டால் வெளிமாநிலங்கள் மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கனவான உல்லாசப் படகு சவாரித் திட்டம் நிறைவேறும். மேலும் இத் திட்டம் தென் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என்பதிலும் ஐயமில்லை.