முகப்பு
திருநெல்வேலி

அணைகளில் குறையும் தண்ணீர் விவசாயிகள் கண்ணீர்

அம்பாசமுத்திரம், செப். 22: தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால்,  திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து  வருகிறது. இதனால், தாமிரபரணி பாசனத்தில் தண்ணீர் பற்றாக்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

அம்பாசமுத்திரம், செப். 22: தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால்,  திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து  வருகிறது. இதனால், தாமிரபரணி பாசனத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தாமிரபரணி வடிநிலப் பகுதியில் 2.55 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் முறைப்பாசன பரப்பு 1.94 லட்சம் ஏக்கர், மானாவாரி பாசனப் பரப்பு 61 ஆயிரம் ஏக்கர் ஆகும். முறைப்பாசன பரப்பில் 1.21 லட்சம் ஏக்கர் இருபோக சாகுபடியும், 73 ஏக்கரில் ஒருபோக சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

நிகழ் கார் பருவத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கிய  போதிலும் சரிவர பெய்யவில்லை. இதனால் எதிர்பார்த்தவாறு அணைகளின் நீர்மட்டம்  உயரவில்லை. இம் மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம்,  மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் 100 அடியைக்கூட எட்டவில்லை. இதனால் அணைகளில் நீர்இருப்பு வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது.

வியாழக்கிழமை (செப். 22) அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின்  நீர்மட்டம் 38.35 அடியாக இருந்தது (2010-ல் இதே நாளில் 49.95 அடி). சேர்வலாறு  அணையின் நீர்மட்டம் 54.13 அடியாக இருந்தது (கடந்த ஆண்டு இதேநாளில் 63.65). மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 47.67 அடியாக இருந்தது. கடந்த ஆண்டைவிட  இவ்வாண்டு பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 612 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு 3 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 702 கனஅடி  தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. மணிமுத்தாறு அணையில் இருந்து பெருங்கால் மதகில் 5 கனஅடி மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நிகழ் கார் பருவத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் முழு அளவில்  பாசனம் செய்யப்பட்டுள்ளது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் பாசனத்துக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது நெற்பயிர் கதிர்  வந்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் நெற்பயிர் கருகும் அபாயம்  உள்ளது.

கார் சாகுபடியில் அறுவடைக்கு இன்னும் 2 வாரங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய  நிலையில் அணைகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து வருவதால் நெற்பயிரை  காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →