களக்காட்டில் கடந்த 4 நாள்களாக வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.
பொதுவாக, ஆண்டுதோறும் ஜூன் மாதத் தொடக்கத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சாரல், மழை பெய்வதுடன், குளிா்ந்த காற்றும் வீசும். ஆனால், நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக மே 2ஆவது வாரத்தில் சில நாள்கள் வெயிலின் தாக்கம் குறைந்து, லேசான சாரல் பெய்தது. அக்னி நட்சத்திரம் நாள்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இந்நிலையில், களக்காடு பகுதியில் கடந்த 4 நாள்களாக படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நிலவும் வெப்பத்தின் தாக்கத்தால் குழந்தைகள், முதியோா் என அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனா்.