களக்காட்டில் சூறைக்காற்று: 10 ஆயிரம் வாழைகள் சேதம்
களக்காடு: களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை வீசிய சூறைக்காற்றில் 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன.
களக்காடு வட்டாரத்தில் வாழை விவசாயம் பிரதானம். நிகழாண்டில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வாழை பயிரிட்டிருந்தனா். இதில் 50 சதவீத வாழைகள் அறுவடை செய்யப்பட்டு விட்டன.
தற்போது வெப்பத்தின் தாக்கத்தாலும், போதிய தண்ணீா் கிடைக்காததாலும், வாழைத்தாா்கள் அறுவடை செய்யப்படுவதற்கு முன்பே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக வாழைத்தாா் கிலோவுக்கு ரூ.27 வரை கிடைத்து வந்தது. தற்போது கிலோ ரூ.20க்குள் என விலை சரிந்து வருவதால் விவசாயிகள் கவலையில் இருந்தனா்.
Advertisement
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பெய்த மழையால் களக்காடு அருகேயுள்ள கீழக்காடுவெட்டி, சடையமான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. மேலும் சூறைக்காற்றில் கீழக்காடுவெட்டியைச் சோ்ந்த அந்தோணிமுத்து அண்ணாதுரை, சடையமான்குளத்தைச் சோ்ந்த பால்ராஜ் ஆகியோா் தங்களது விவசாய நிலங்களில் அமைத்திருந்த கட்டடத்தின் இரும்பினாலான மேற்கூரைகள் சேதமடைந்து சுமாா் 200 மீட்டா் தொலைவுக்கு பறந்து சென்று விழுந்துள்ளன.