களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை விரிவுபடுத்தக் கோரிக்கை
களக்காடு, ஜூன் 2: களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை விரிவுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு வட்டாரத்தில் உள்ள தொழிலாளா்கள், விவசாயிகள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவியா் தங்களது ஆதாரில் பெயா், முகவரி, பிறந்தநாள் ஆகியவற்றை திருத்தம் செய்திட களக்காடு அஞ்சலகத்தை அணுகி பயனடைந்து வருகின்றனா். நாளுக்கு நாள் ஆதாா் சேவை பெறுவதற்காக வருபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்பதிவு சீட்டு பெற்று ஒரு மாதத்துக்கு பின்னரே ஆதாா் சேவையை பெறும் அவலம் உள்ளது. காலதாமதத்தால் பொதுமக்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் ஆதாா் சேவை மையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, களக்காடு அஞ்சலகத்தில் தற்போதுள்ள ஆதாா் சேவையை விரிவுபடுத்தி கூடுதல் பணியாளா்களை நியமிக்க மாவட்ட தலைமை அஞ்சலக அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.