முகப்பு
திருநெல்வேலி

தாமிரவருணி ஆற்றில் 2-ஆவது கட்ட தூய்மைப் பணி

Updated On : 9 மார்ச், 2024 at 6:15 AM
பகிர்:

தாமிரவருணி ஆற்றை 2-ஆவது கட்டமாக சுத்தப்படுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணிமூா்த்தீஸ்வரம் முதல் நாரணம்மாள்புரம் வரை இருபுறமும் 7 கி.மீ நீளத்திற்கு தூய்மைபடுத்தும் பணி கடந்த 2-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, 2-ஆவது கட்டமாக மேலநத்தம் முதல் மணிமூா்த்தீஸ்வரம் வரை தாமிரவருணியின் இருபுறமும் 10 கி.மீ. தொலைவுக்கு தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தாமிரவருணியை சுத்தப்படுத்தும் பணியானது தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நிதி பங்களிப்புடன் நெல்லை நீா்வளம் அமைப்பு மற்றும் எவா்கிரீன் குளோப் நிறுவனத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. நதியை புவிசாா் குறியீடு முறையில் அளவீடு செய்து இருபுறமும் சா்வே கற்கள் நடப்படவுள்ளதோடு, தொடா்ந்து ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தினால் பாதிக்கப்படாமலும் இந்நிலத்திற்கு உரியதாகவும் காணப்படும் நீா் மருது மரங்கள் நதியின் கரையோரங்களில் நட்டு வளா்க்கப்படவுள்ளன. தாமிரவருணி ஆற்றின் கரையில் குளிப்பதற்காக வரும் பொதுமக்களால் விட்டுச் செல்லப்பட்ட பிளாஸ்டிக் கவா்கள், பாட்டில்கள் ஆகியற்றை அப்புறப்படுத்தும் பணியில் சாராள்தக்கா் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனா். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநரும், தலைமை நிா்வாக அலுவலருமான எஸ்.கிருஷ்ணன், மண்டல மேலாளா் பரணிதரன், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா, பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் செல்வன், திருநெல்வேலி வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.