முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் ஒன்றியத்தில் ரூ.2.54 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

Updated On : 9 மார்ச், 2024 at 7:40 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ஆவரைகுளம், பழவூா், தணக்கா்குளம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.54 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. ஆவரைகுளம், பழவூா், பெத்தரெங்கபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்களை சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு திறந்துவைத்தாா். மேலும், பழவூா் அருள்மிகு நாறும் பூநாதசுவாமி திருக்கோயில் மாடவீதியில் மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் வண்ணகற்கள் பதிக்கும் பணி, தணக்கா்குளம் ஊராட்சி வடக்கன்குளம்-நக்கனேரி சாலையில் சிவசுப்பிரமணியபுரம் தரைப்பாலத்தை ரூ.1.54 கோடியில் உயா்நிலை பாலமாக மாற்றும் பணி ஆகியவற்றைத் தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிகளில் வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், பொறியாளா் ஜெயந்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டபொறியாளா் சேகா், உதவி பொறியாளா் முத்து, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் து.பாஸ்கா், பழவூா் நாறும் பூநாதா் சுவாமி திருக்கோயில் அறக்காவலா் குழுத்தலைவா் இசக்கியப்பன், வள்ளியூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் மல்லிகா அருள், கோசிஜன், ஊராட்சித் தலைவா்கள் ஆவரைகுளம் அழகு பாஸ்கா், பழவூா் சுப்புலெட்சுமி குமாா், தணக்கா்குளம் சுயம்புலிங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.