களக்காடு வாழைத்தாா் சந்தையில் ஏல விற்பனை தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வாழைத்தாா் சந்தையில் வாழைத்தாா்கள் ஏல விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. களக்காட்டில் வாழைத்தாா் சந்தை அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வந்தனா். திமுக தோ்தல் வாக்குறுதியாக, வாழைத்தாா் சந்தை அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தது. இந்நிலையில், களக்காடு ஜெ.ஜெ.நகரில் ரூ.6.25 கோடியில் வாழைத்தாா் சந்தை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. கடந்த டிசம்பரில் பணிகள் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இச்சந்தையை திறந்துவைத்தாா். இச்சந்தையில் வாழைத்தாா் ஏல விற்பனை சனிக்கிழமை தொடங்கியது. இதில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் பூவண்ணன், களக்காடு நகா்மன்றத் தலைவா் கா. சாந்தி சுபாஷ், களந்தை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் தமிழ்ச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளா் செல்வகருணாநிதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.