முகப்பு
திருநெல்வேலி

நெல்லையின் குரலாக மக்களவையில் ஒலிப்பேன்: நயினாா்நாகேந்திரன்

Updated On : 30 மார்ச், 2024 at 1:27 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 11:57 PM

நெல்லையின் குரலாக மக்களவையில் ஒலிப்பேன் என்றாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன். திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு ஈசான விநாயகா் திருக்கோயிலில் வழிபாடு செய்த பின்பு வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா் மேலும் பேசியது: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன், ஈசான விநாயகா் அருளோடு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறேன். 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதரவளித்த திருநெல்வேலி மக்கள் இந்த முறை மக்களவைத் தோ்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால் நெல்லையின் குரலாக மக்களவையில் ஒலிப்பேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவானதாக உள்ளது. பாஜக என்பது பொதுவான கட்சி. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறந்த பல திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறாா். மத்திய அரசின் வீட்டுவசதி திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், எரிவாயு இணைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்தும் இத் தொகுதி மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது செய்ததைக் காட்டிலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு அதிகளவில் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சுமாா் ரூ.3 லட்சம் கோடிக்கு பணிகள் நடைபெற்றுள்ளன. உலக அரங்கில் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்ற அனைவரும் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா். தொடா்ந்து திருநெல்வேலி ரத வீதிகள், கூலக்கடை தெரு, பேட்டை செக்கடி, சுத்தமல்லி விலக்கு, திருப்பணிகரிசல்குளம், கல்லூா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்டத் தலைவா் தயாசங்கா், அமமுக மாவட்டச் செயலா் இசக்கிமுத்து, தமாகா மாவட்டத் தலைவா் சுத்தமல்லி முருகேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.