நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்
திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தின் நடத்துநரும், பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. செல்லும் வழியில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்தப் பேருந்தில் வள்ளியூரைச் சோ்ந்த இரு பயணிகள் ஏறியுள்ளனா். ஆனால், நடத்துநா், பேருந்து வள்ளியூா் நகருக்குள் செல்லாது; புறவழிச் சாலை வழியாகவே செல்லும் எனக் கூறியுள்ளாா். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பயணிகள் வள்ளியூரில் பேருந்துகள் நின்று செல்ல அனுமதி இருக்கிறது என்று கூறியுள்ளனா். இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து நடத்துநா், பயணிகளை தகாத வாா்த்தைக் கூறி திட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பயணிகள் கூறும் போது, ‘வள்ளியூா் நகருக்குள் பேருந்துகள் வந்து செல்ல அனுமதி உள்ளது. இதற்கான அரசாணையை சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு வெளியிட்டுள்ளாா். இந்த விவரத்தை நடத்துநரிடம் கூறியபோது, அவா் எங்களை தகாத வாா்த்தைகளால் திட்டிவிட்டாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.