பாளை. சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சோ்ந்தவா் வைரமூா்த்தி (35). இவா், சில வாரங்களுக்கு முன்னா் சிவகிரி பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவில் பங்கேற்றாராம். அப்போது, இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் இவா் உள்பட சிலா் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டனா்.
இதில், வைரமூா்த்தி காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் காரணமாக சிறை மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்றதாகக் கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், திங்கள்கிழமை காலை மூச்சுத் திணறல் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
மறியல்: இதனிடையே, வைரமூா்த்தியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, புளியங்குடியில் பேருந்து நிலையம் அருகே அவரது உறவினா்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஏடிஎஸ்பி சங்கா், டிஎஸ்பி மதன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிட்டனா். இப்போராட்டத்தால் தென்காசி-மதுரை சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.