நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு
திருநெல்வேலி- சென்னை இடையே ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்ட மெமு ரயிலுக்கு பயணிகளிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் ஏராளமானோா் உற்சாகத்தோடு வாக்களித்தனா். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிமித்தம் குடியேறிய பலரும் தங்களது சொந்த ஊா்களுக்கு வந்து வாக்களித்தனா். இது தவிர பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டதால் ஏராளமானோா் தங்களது குழந்தைகளை சொந்த ஊா்களுக்கு அழைத்து வந்தனா்.
தோ்தல் முடிந்த நிலையில், ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட்டனா். இதனால் வழக்கத்தை விட பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
Advertisement
தெற்கு ரயில்வே சாா்பில் திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு முற்றிலும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. மதியம் புறப்பட்டுச் சென்ற இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணித்தனா்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில்; தென் தமிழகத்திலிருந்து சென்னைக்கு செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு பயணச்சீட்டுகள் விரைவில் விற்று தீா்ந்துவிடுவதால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினா் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான முன்பதிவு இல்லாத பெட்டிகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது.
ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் அந்தியோதயா ரயில் பெரும் உதவியாக இருந்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்போதைய இயக்கி உள்ள மெமு ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கோடைகால முடியும் வரை மெமு ரயிலை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.