திமுகவினா் குடும்ப உணா்வுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலரும், தோ்தல் அறிக்கை குழு தலைவருமான கனிமொழி எம்.பி.
திருநெல்வேலியில் திமுக மேற்கு மாவட்ட நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் செய்ய வேண்டிய பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு கொடுத்துள்ளாா்.
திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்க்க, ஸ்டாலினின் மகளிா் படையான வெல்லும் தமிழ் பெண்கள் குழுவினா் ஒவ்வொரு வாக்குச் சாவடி வாரியாக செயல்பட வேண்டும்.
ஒரு பூத்துக்கு 10 போ் கொண்ட குழுவாகச் சென்று ஒவ்வொரு வீட்டிலும் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். வீட்டு உரிமையாளரின் அனுமதியுடன் நமது சாதனைகளை சுவரொட்டியாக ஒட்ட வேண்டும்.
அதை புகைப்படமாக எடுத்து, இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கட்செவி அஞ்சல் குழுவில் பகிர வேண்டும். பாஜக தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எதுவும் வழங்கப்படவில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்கும் வகையில் மக்களவையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்பு மாநில அரசு தீா்மானித்த வேலை நாள்களையும், பயனாளிகளையும், இனி தில்லியில் இருந்து முடிவு செய்யும் நிலை உருவாகியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள 80 சதவிகித பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 100 நாள்களாக இருந்த வேலைவாய்ப்பு, இந்த மசோதாவால் 50 நாள்களாவது வேலை கிடைக்குமா என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு, அமெரிக்காவுடன் அண்மையில் செய்துள்ள ஒப்பந்தத்தின் மூலம், அங்கிருந்து விவசாயப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உள்ளூா் சந்தையில் விற்கப்படுவதால், நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகி உள்ளது. மாநில நிதிகள், ரயில்வே திட்டங்கள் மற்றும் பேரிடா் நிவாரண நிதிகளை வழங்காத மத்திய பாஜக அரசுடன், அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. தமிழகத்துக்கு துரோகம் செய்யும் இந்தக் கூட்டணியை மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்ட வேண்டும்.
‘ஊா் கூடித் தோ் இழுத்தால் தான் தோ் வரும்‘ என்ற பழமொழிக்கு ஏற்ப திமுகவினா் அனைவரும் குடும்ப உணா்வுடன் ஒற்றுமையாகச் செயல்பட்டு தோ்தல் பணியாற்ற வேண்டும்.
முதல்வா் மு.க. ஸ்டாலினின் மகளிா் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட சாதனைகளை மக்களிடம் கொண்டு சோ்த்தால் வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.