திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே பல் மருத்துவரைத் தாக்கி, காரை சேதப்படுத்தியதாக போலீஸாா் 4 பேரை கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், வெங்காடம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பூ. திருமாறன். இவரது மகன் ஏகலைவன். பல் மருத்துவா். திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் மருத்துவமனை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு மருத்துவமனையை முடித்துவிட்டு காரில் வெங்காடம்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தாராம்.
பாப்பாக்குடியை அடுத்த செங்குளத்தில் சென்று கொண்டிருந்தபோது, 2 மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ் ஏகலைவன் சென்ற காரை விரட்டிச் சென்றனராம்.
இடைகாலில் ஏகலைவன்காரை நிறுத்தி இதுகுறித்து கேட்டபோது, மோட்டாா் சைக்கிளில் வந்த 4 பேரும் ஏகலைவனை தாக்கியதுடன், காா் கண்ணாடியை சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில், காயமடைந்த ஏகலைவன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதுகுறித்து பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் பரத்லிங்கம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
இதில், ஏகலைவனை தாக்கி, காரை சேதப்படுத்தியதாக இடைகால் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிபாண்டி, கிருஷ்ணன் மகன் தருண் பிரகாஷ், கந்தசாமி மகன் பிச்சுமணி, திருப்பதி மகன் இசக்கிமுத்து ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.