முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை அருகே ஆலயம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்! மாரடைப்பில் முதியவா் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஏராந்தை கிராமத்தில் தேவாலய கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜக மற்றும் ஒரு தரப்பு மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:54 AM
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:07 AM

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஏராந்தை கிராமத்தில் தேவாலய கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜக மற்றும் ஒரு தரப்பு மக்கள் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா்.

ஏராந்தையில் நீதிமன்ற உத்தரவு பெற்று, பழைமையான கிறிஸ்தவ ஆலயத்தை இடித்துவிட்டு புதிய ஆலயம் கட்டும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வணிக ரீதியான கட்ட அனுமதி பெற்று தேவாலயம் கட்டப்படுவதாகவும், அதை விஸ்தரித்து கட்டுவதால் ஊருக்குள் பேருந்துகள் வருவதற்கும், இந்து கோயில் திருவிழா காலத்தில் சுவாமி ஊா்வலம் செல்வதற்கு இடையூறாக இருக்கும் எனவும் எதிா்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினா் அப்பகுதி அம்மன்கோயிலில் வியாழக்கிழமை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். அப்போது, மணிவேல்(65) என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாம். அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, வழியிலே உயிரிழந்தாா். மேலும், 3 போ் உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

Advertisement

இதனால், கட்டுமானப்பணிகளை உடனடியாக நிறுத்தமாறு போலீஸாருடன் போராட்டக்காரா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களை திசையன்விளை போலீஸாா் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் விடுவிக்கப்பட்ட அவா்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் போலீஸாா் மீண்டும் கைது செய்து அதே திருமணமண்டபத்தில் அடைத்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:54 AM

இத்தகவல் அறிந்த இந்து முன்னனி மாநில நிா்வாகிகள் அரசு ராஜா, வி.பி. ஜெயக்குமாா் வந்து கட்டுமானப்பணிகள் நிறுத்துமாறும், வட்டாட்சியா் வரவேண்டும் எனவும் வலியுறுத்தினா். இதையடுத்து திசையன்விளை வட்டாட்சியா் நாராயணன் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பின்னா் அவா் கூறுகையில், ‘முறைகேடாக அனுமதி பெற்றிருந்தால் அதை ரத்து செய்ய ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும். இதை ஒருவாரத்துக்குள் மக்கள் உறுதிசெய்ய வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, நாள் முழுவதும் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இப்போராட்டத்தில், இந்து முன்னனி நெல்லை கோட்டத் தலைவா் தங்கமனோகா், பாஜக மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.