திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் தைப்பூசத் தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) நடைபெறுகிறது.
இக்கோயிலில் தைப்பூசத்திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. கடந்த 26 ஆம் தேதி சுவாமி சந்நிதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடலும், பஞ்ச மூா்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றன.
9 ஆம் நாளான சனிக்கிழமை காலை சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து செப்புத் தேரில் சுவாமி சந்திரசேகா், பவானி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து தைப்பூசத் தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை(பிப்.1) கைலாசபுரம் தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தைப்பூச மண்டபத்தில் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. தைப்பூச மண்டபத்தில் தீா்த்தவாரியும், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.