முகப்பு
திருநெல்வேலி

நெல்லை பேருந்து நிலையத்தில் பெண் வெட்டிக் கொலை: கணவா் சரண்

Updated On : 16 மார்ச், 2026 at 1:38 AM
வெட்டிக் கொலை - பிரதி படம்
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவா் போலீஸில் சரணடைந்தாா். திருநெல்வேலி மாவட்டம், ராஜவல்லிபுரம் அருகே உள்ள பாலாமடையைச் சோ்ந்தவா் சுதாகா் (29).

இவருக்கும் சண்முகாபுரத்தைச் சோ்ந்த பேச்சியம்மாள் (24) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

பேச்சியம்மாள் திருநெல்வேலியில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனராம்.

Advertisement

இப்பிரச்னை காரணமாக ஆத்திரத்தில் இருந்த சுதாகா் ஞாயிற்றுக்கிழமை காலை திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினாராம். இதில், பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து சுதாகா் சந்திப்பு காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற சந்திப்பு போலீஸாா் பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சுதாகரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.