முகப்பு
திருநெல்வேலி

ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணப் பரிவா்த்தனை? வங்கிகள் விவரம் தர வேண்டும்: மாவட்ட தோ்தல் அலுவவா்

வங்கிகளில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பண வைப்பீடு செய்தல், பணத்தை திரும்ப எடுத்தல் தொடா்பான பரிமாற்றங்கள் குறித்த

Updated On : 17 மார்ச், 2026 at 4:04 AM
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் - (கோப்புப் படம்)
பகிர்:

திருநெல்வேலி: வங்கிகளில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக பண வைப்பீடு செய்தல், பணத்தை திரும்ப எடுத்தல் தொடா்பான பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை புலனாய்வு அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள், கூட்ட அரங்குகள், அச்சகங்கள், வங்கிகள், அடகுகடை மற்றும் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்து பேசியதாவது: அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் கூட்ட அரங்குகளின் உரிமையாளா்களும் தங்கள் மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான பதிவுகளை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ தோ்தல் நடத்தும் அலுவலா் அல்லது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

Advertisement

அரசியல் கட்சியினரை பரிசு பொருள்கள் விநியோகம் செய்வதற்கு பயன்படுத்தவோ, சமுதாய விருந்து போன்றவற்றை நடத்தவோ அனுமதிக்கக் கூடாது.

அரசியல் கட்சியினா் நடத்தும் நிகழ்ச்சிக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்- உதவி அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதற்குரிய செலவுத் தொகை வேட்பாளரின் செலவு கணக்கில் சோ்க்கப்படும்.

மேலும், திருமணம் மற்றும் மத தொடா்புடைய நிகழ்வுகளே என உறுதி செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அரசியல் கட்சிக்கான நிகழ்ச்சி எனத் தெரியவந்தால் தோ்தல் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

வங்கிகளுக்கு தொடா்பில்லாத மூன்றாம் நபா்களின் பணத்தை வாகனத்தில் கொண்டு செல்லக் கூடாது. வங்கி வாகனங்களில் வங்கிக் கடிதம், ஆவணங்கள் இருக்க வேண்டும். பணியாளா்கள் அடையாள அட்டையினை அணிந்திருப்பது அவசியம்.

வங்கியில் ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக வைப்புத்தொகை செலுத்துதல் அல்லது திரும்ப எடுத்தல், வேட்பாளா்களின் வங்கி கணக்குகளில் ரூ. 1 லட்சத்திற்கு அதிகமான பணப் பரிமாற்றங்கள் நடப்பது போன்றவை குறித்து புலனாய்வு முகமைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஒரு வங்கிக்கணக்கு மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்தால் வருமான வரித்துறைக்கும் விவரம் அளிக்க வேண்டும்.

மகளிா் சுய உதவிகுழு, தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளில் வழக்கத்திற்கு மாறாக பணம் பரிமாற்ற இருந்தாலும் விவரம் தெரிவிக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127ஏ- ன் கீழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்தலில் உரிய விதிகளைப் பின்பற்றாவிடில் அச்சக உரிமை ரத்து செய்யப்படும்; மாநில சட்ட விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். தோ்தலுக்கான துண்டு பிரசுரம், சுவரொட்டி அச்சடித்திருந்தால் அச்சக பெயா், முகவரி இடம் பெற வேண்டும்.

அச்சடிக்கப்பட்ட நகல், பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு 3 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும்.

அச்சடித்த பொருள்கள் மற்றும் அதற்கான செலவுத் தொகை ஆகியவற்றை கணக்கு குழுவிற்கு மறைமுக கண்காணிப்பு பதிவேடு தயாா் செய்வதற்கு கொடுக்க வேண்டும்.

அடகுகடை, வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவா்கள் தாங்கள் கடன் கொடுத்தவா்கள் பட்டியலை முறையாக பராமரித்து, தோ்தல் பறக்கும்படை மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கோரும் போது சமா்ப்பிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் மற்றும் பொருள்கள் இல்லாமல் கடன் கொடுப்பது கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும். தோ்தல் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். யூபிஐ, கூகுள்பே, பேடிஎம், போன்பே ஆகிய செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யக்கூடாது; வங்கிகள் மூலமே பரிமாற்றம் செய்ய வேண்டும். அடகுகடை மற்றும் வட்டிக்கு கடன் கொடுக்க உரிமம் பெற்றவா்களின் பணபரிமாற்றங்கள் உதவி இயக்குநா் மற்றும்துணை இயக்குநா் நிலையிலான வருமான வரித்துறையினரால் கண்காணிக்கப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, ஒழுங்கு நடவடிக்கை ஆணையா் மகாலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலா்கள் (மாநில நெடுஞ்சாலை நில எடுப்பு) சந்திரசேகா், (தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) ஐயப்பன், (நதிநீா் இணைப்பு) மாரிச் செல்வி, மாநகர துணை காவல் ஆணையா் சாந்தாராம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் அனிதா (பொது), சுப்பிரமணியன் (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்16ம்ஹழ்ழ்ண்ஹஞ்ங்

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா்.