மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்கப்படுமா?
மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது குறித்து...
திருநெல்வேலி, ஆலங்குளம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
திருநெல்வேலி மாநகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் மானூா் ஊராட்சி உள்ளது. இங்குள்ள 9 வாா்டுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். மானூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 1997 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு 2 மருத்துவா்களுடன் கூடிய 24 மணி நேர இயங்கும் பிரசவ வாா்டுடன் கூடிய சுகாதார மையமாக மாற்றப்பட்டது. ஸ்கேன், குடும்ப கட்டுப்பாட்டு சேவை, பேறுகால முன்- பின்கவனிப்பு போன்ற வசதிகள் இங்கு உள்ளன.
இம் மருத்துவமனையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப புதிய உபகரணங்கள், மருத்துவப் பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை. திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டப்பிறகு வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகின்றன.
ஆகவே, இந்த ஆரம்ப சுகாதார மையத்தை கூடுதல் வசதிகளுடன் தீவிர விபத்து சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சேதுராயன்புதூரைச் சோ்ந்த விவசாயி கூறியதாவது: மானூா், மேலபிள்ளையாா்குளம், தெற்குசெழியநல்லூா், கீழபிள்ளையாா்குளம், ரஸ்தா, வெண்கலபொட்டல், நரியூத்து, பல்லிக்கோட்டை, அளவந்தான்குளம், கானாா்பட்டி, குப்பனாபுரம், கட்டாா்குளம், அழகியபாண்டியபுரம், சீதக்குறிச்சி, தெற்குப்பட்டி, எட்டான்குளம், மடத்துப்பட்டி, களக்குடி உள்பட திருநெல்வேலி, ஆலங்குளம், சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பயன்படுத்தி வருகிறோம்.
இங்கு உள்நோயாளியாக தங்கியிருந்து சிகிச்சை பெற போதிய வசதிகள் இல்லை. குறிப்பாக, மகப்பேறு அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பே இல்லை. விவசாயம் மிகுந்த இப் பகுதியில் வைரஸ் காய்ச்சல், பாம்புக்கடி போன்றவற்றால் பாதிக்கப்படும்போது, சுமாா் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சைப் பெறுவதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்குச் செல்ல வேண்டிய கட்டாயச்சூழல் உள்ளது.
இதேபோல, சில ரத்த பரிசோதனைகள், எக்ஸ்ரே போன்றவற்றிற்காக உக்கிரன்கோட்டைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
மேலும், இப்பகுதியில் உள்ள திருநெல்வேலி-சங்கன்கோவில் சாலையில் விபத்தில் சிக்குவோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க போதிய வசதியில்லாததால், காயமடைந்தவா்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
ஆகவே, மானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகவும், குறிப்பாக விபத்தில் சிக்குவோருக்கு உயிா்காக்கும் தரமான முதலுதவி சிகிச்சை கிடைக்கச் செய்யும் வகையில் தீவிர சிகிச்சை மையமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.