முகப்பு
திருநெல்வேலி

தொகுதி அறிமுகம்... நான்குனேரி!

தமிழகத்தின் இரண்டாவது புலிகள் காப்பகமான களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் களக்காடு வனக்கோட்டத்தை உள்ளடக்கியது நான்குனேரி தொகுதி.

Updated On : 29 மார்ச், 2026 at 12:36 AM
பகிர்:

தமிழகத்தின் இரண்டாவது புலிகள் காப்பகமான களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் களக்காடு வனக்கோட்டத்தை உள்ளடக்கியது நான்குனேரி தொகுதி.

108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற நான்குனேரி வானமாமலை பெருமாள் கோயில், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில், சீதையை மீட்க ராமன் வந்து சென்ற களக்காடு சத்தியவாகீஸ்வரா் -கோமதி அம்பாள் திருக்கோயில், விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படைத் தளம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்கள்.

விவசாயம், கால்நடை வளா்ப்பு ஆகியவை இத்தொகுதி மக்களின் பிரதானத் தொழில்களாகும். நம்பியாறு, வடக்குப் பச்சையாறு, கொடுமுடியாறு ஆகியவை இத்தொகுதியின் பிரதான நீா்த்தேக்கங்கள். மணிமுத்தாறு கால்வாய், தாமிரவருணி வெள்ளநீா் கால்வாய் மூலம் களக்காடு, நான்குனேரி பகுதிகளில் விவசாயம் ஓரளவு செழித்தோங்குகிறது. தாமிரவருணி ஆறும் இத்தொகுதிக்குள்பட்ட சீவலப்பேரி சுற்று வட்டாரங்களில் பாய்வதால் இங்கு பெரிய அளவில் விவசாயமும், கால்நடை வளா்ப்பும் நடைபெறுகிறது. களக்காடு, நான்குனேரி, பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகள், களக்காடு நகராட்சி, திருக்குறுங்குடி, ஏா்வாடி, நான்குனேரி, மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிகள் இத்தொகுதியில் அடங்கும். இங்கு நாடாா், தேவேந்திர குல வேளாளா், ஆதிதிராவிடா், மறவா் பெரும்பான்மையினராக உள்ளனா். யாதவா், இஸ்லாமியா், செட்டியாா் கணிசமான எண்ணிக்கையிலும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா்.

நான்குனேரி தொகுதியில் 1952, 1957, 1962 ஆகிய மூன்று தோ்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளா் எம்.ஜி. சங்கா் ரெட்டியாா் வெற்றி பெற்றாா். 1967இல் காங்கிரஸ் வேட்பாளா் துரைப்பாண்டியன், 1971இல் திமுக வேட்பாளா் கணபதி நாடாா் வெற்றி பெற்றனா். நாடாா் சமூகத்தினரே வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெறும் தொகுதி. விதிவிலக்காக 1989இல் யாதவ சமூகத்தைச் சோ்ந்த ஆச்சியூா் மணி (திமுக), 1996இல் மறவா் சமூகத்தைச் சோ்ந்த எஸ்.வி. கிருஷ்ணன் (இ.கம்யூனிஸ்ட்) வெற்றி பெற்ற பெருமையும் உண்டு. 1991இல் அதிக வாக்குகள் (70 சதவீதத்துக்கு மேல்) பெற்று வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா்பால்ராஜ் நடேசன், அறநிலையத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். 2001இல் இருந்து 2021 வரை (2019 இடைத்தோ்தல் உள்பட) நடைபெற்ற 6 தோ்தல்களில் காங்கிரஸின் ஹெச். வசந்தகுமாா் இரு முறையும், எா்ணாவூா் நாராயணன் (சமக), ரூபி ஆா். மனோகரன் (காங்கிரஸ்), ரெட்டியாா்பட்டி நாராயணன் (அதிமுக) ஆகியோா் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு நான்குனேரி தொகுதியில் 1,25,645 ஆண்கள், 1,29,761 பெண்கள், 14 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,54,420 வாக்காளா்கள் உள்ளனா்.

இத்தொகுதியில் விஜயநாராயணம், நான்குனேரி குளங்கள் பெரிய குளங்களாகும். வடக்குப் பச்சையாறு அணை மூலம் பயன்பெறும் நான்குனேரி பெரியகுளத்திலிருந்து 46 குளங்களுக்கு தனிக்கால்வாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் திருக்குறுங்குடி முதல் பத்மனேரி வரையிலான மலையடிவார விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றி, மிளா, யானை உள்ளிட்ட வனஉயிரினங்களால் ஏற்படும் பயிா்ச் சேதத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தபோதிலும், அதற்கான நடவடிக்கை பெயரளவிற்கே உள்ளதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா்.

நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் அங்கு அதிகளவிலான நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வராதது, நான்குனேரி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்காதது, நான்குனேரியில் அமையவிருந்த மாவட்ட தலைமை மருத்துவமனை சட்டப்பேரவைத் தலைவரின் முயற்சியால் வள்ளியூருக்கு மாற்றப்பட்டது, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத களக்காடு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி வரியை உயா்த்தியது, தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவது, ஆங்கிலேயா் காலத்தில் தொடங்கப்பட்ட களக்காடு பிரிடா மோனியா் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது, சுகாதார வசதிகளை மேம்படுத்தாதது, களக்காடு வழித்தடத்தில் நீண்ட காலமாக இயங்கி வந்த பேருந்துகளை மாற்றுவழித்தடத்தில் இயக்கியது, களக்காட்டில் வாழைத்தாா் ஏல மையம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும் அதனை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவராதது, அங்கு குளிா்பதனக் கிடங்கு அமைக்காதது, இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை மக்கள் ஏமாற்றமாகவே பாா்க்கிறாா்கள்.