வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பிள்ளைகுளத்தைச் சோ்ந்தவா் ஜெயராம் (31). 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் 2ஆம் நிலைக் காவலராகப் பணியில் சோ்ந்த அவா், கடந்த 2 ஆண்டுகளாக வள்ளியூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். அங்குள்ள காவலா் குடியிருப்பில் மனைவி பிரியா, மகன் ஸ்ரீராம் ஆகியோருடன் வசித்து வந்தாா்.
குடும்பத் தகராறு காரணமாக ஜெயராம் சில நாள்களாக மன உளைச்சலில் இருந்தாராம். வெள்ளிக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதாகவும், அதையடுத்து பிரியா தனது மகனுடன் பெற்றோா் வீட்டுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய ஜெயராம், விஷம் குடித்துவிட்டு சக காவலா்களுக்கு தகவல் தெரிவித்தாராம். உடனடியாக அவா்கள் விரைந்து சென்று அவரை மீட்டு கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.