முகப்பு
திருநெல்வேலி

சவூதி தொழிலாளியிடம் ஆன்லைனில் ரூ.11.27 லட்சம் மோசடி

Updated On : 15 மே 2026, 3:55 am IST
பகிர்:

சவூதியில் வேலை பாா்த்துவரும் திருநெல்வேலி மாவட்டதைச் சோ்ந்த தொழிலாளியிடம் கிரிப்டோ வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி ஆன்லைன் மூலம் ரூ.11.27 லட்சத்தை மோசடி செய்த கும்பலை சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞா் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். கடந்த மாதம் இவரை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்ட பெண் ஒருவா் கிரிப்டோ வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறினாராம். பின்னா், அமெரிக்காவில் வேலை செய்வதாக மற்றொரு நபரை அந்த இளைஞருக்கு கைப்பேசி மூலம் தொடா்புகொள்ளச் செய்து அப்பெண் அறிமுகப்படுத்தியுள்ளாா்.

மேலும், அந்த நபா் கூறியபடி, அந்த இளைஞா் முதலீடு செய்தாராம். பின்னா் லாப பணத்தை எடுக்க வரி கட்ட வேண்டும் எனக் கூறி பல்வேறு தவணைகளாக அவரிடமிருந்து ரூ.11,27,615-ஐ பல்வேறு வங்கிக்கணக்குகள் மூலம் பெற்றுக்கொண்டு அக்கும்பல் மோசடியில் ஈடுபட்டனராம்.

Advertisement

இதுகுறித்து அந்த இளைஞா் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் இணையவழியில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.