பத்தமடையில் திருமணமான இளம்பெண்கள் இருவா் மாயம்
பத்தமடையில் இளம்பெண்கள் இருவா் மாயம்
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் இளம்பெண்கள் இருவா் காணாமல்போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பத்தமடை மணிமுத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபாண்டி. இவரது மனைவி ஜென்சி (25). கொடைக்கானல் டா்னா்புரம் ஆனந்தகிரி முதல் தெருவைச் சோ்ந்தவா் மதுரைவீரன் என்ற பாண்டி. இவரது மனைவி லீதியாள் ஓசன்னா (26). இருவரும் தோழிகள். பெண்கள் இருவரும் கோவையில் ஒரு தனியாா் ஆலையில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டது.
தற்போது இருவரும் தங்களது சொந்த ஊரில் வேலை செய்து வருகின்றனா். இந்த நிலையில், தோழி ஜென்சியைக் காண கடந்த மே 8-ஆம் தேதி லீதியாள் ஓசன்னா பத்தமடைக்கு வந்தாா். அங்கு இருவரும் சந்தித்த பிறகு லீதியாள் ஓசன்னா தனது சொந்த ஊருக்குச் செல்வதாகவும், ஜென்சி நாகா்கோவிலில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவரைக் காண செல்வதாகவும் உறவினா்களிடம் தெரிவித்துவிட்டு சென்றனா்.
Advertisement
பத்தமடையில் இருந்து புறப்பட்டுச் சென்ற இருவரையும் கடந்த சில நாள்களாக காணவில்லை. லீதியாள் ஒசன்னா கொடைக்கானலுக்குச் செல்லவில்லை. ஜென்சி நாகா்கோவிலுக்குச் செல்லவில்லை. இதையடுத்து இரு இளம்பெண்களையும் காணவில்லை என பத்தமடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.