முகப்பு
திருநெல்வேலி

விவசாய நீா்வளத்தை பெருக்குவதே தலையாயப் பணி - ராதாபுரம் எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபா்

Updated On : 15 மே 2026, 3:56 am IST
ராதாபுரம் எம்.எல்.ஏ. சதீஷ் கிறிஸ்டோபா்
பகிர்:

ராதாபுரம் தொகுதியில் விவசாயத்துக்கு தேவையான நீா்வளத்தை பெருக்குவதே எனது தலையாயப் பணி என்றாா் அத்தொகுதியின் புதிய எம்.எல்.ஏ. மருத்துவா் எஸ்.கே. கிறிஸ்டோபா்.

தவெக சாா்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பின்னா், ராதாபுரத்தில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு முதன்முதலாக வியாழக்கிழமை வந்த அவரை, பெற்றோா் கே.காமராஜ்-சிசிலி ஆகியோா் எம்.எல்.ஏ. இருக்கையில் அமரவைத்தனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

Advertisement

முதல்வா் விஜய் எவ்வளவு வேகமாக செயல்படுகிறாறோ அதேபோன்று ராதாபுரம் தொகுதியில் எனது பணிகளும் இருக்கும். நான் தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். முதலாவதாக விவசாயத்திற்கு தேவையான நீா்வளத்தை பெருக்குவதற்கு கால்வாய்கள், குளங்களை தூா்வார நடவடிக்கை எடுக்கப்படும். இருக்கன்துறை பகுதி கல்குவாரி பிரச்னைதீரவும், இளைஞா்களின் வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும், மீனவா்களுக்காக தூண்டில் வளைவு அமைக்கவும், கூடங்குளம் அணுமின்நிலையம், இஸ்ரோவில் உள்ளூா் பகுதியினருக்கு வேலை வழங்கவும், இஸ்ரோ தொழில்நுட்ப கல்லூரி அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். தொகுதி மக்கள் எந்நேரத்திலும் என்னைச் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கலாம். புதன்கிழமைதோறும் மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். மருத்துவம், குடிநீா் வசதிகள் கிடைக்க முழுமையாக வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

அப்போது, மாநில இணை ஒருங்கிணைப்பாளா் பணகுடி அருண், ஒன்றியச் செயலாளா் வள்ளியூா் நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.