கல்குளம் வட்ட இறைச்சி கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு, மருத்துவ நிர்வாகத் துறை மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி ஆகியன சார்பில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற விளக்க கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கருணாகரன் பேசியது:
இறைச்சி கடைகள் திறந்தவெளியில், சாலையோரங்களில் நடத்தக் கூடாது. கடைகளில் வைத்து சுகாதாரமான முறையில் விற்க வேண்டும். கடை நடத்துபவர்கள் உரிமம் பெற்றிருக்கவேண்டும். கறி வெட்டுபவர் மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றிருக்கவேண்டும். பாலிதீன் கவர்களை பயன்படுத்தக்கூடாது என்றார் அவர்.
கூட்டத்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மகேஷ்வரன், கல்குளம் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர் கிளாட்சன், நகராட்சி சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில், பொறியாளர் ஸ்ரீனிவாசராவ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் கல்குளம் வட்ட இறைச்சி கடை உரிமையாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.