ஏப். 20 இல் குமரிக்கு திருநாவுக்கரசர் வருகை
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஏப். 20ஆம் தேதி வருகை தரும் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஏப். 20ஆம் தேதி வருகை தரும் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என்று குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. பிரின்ஸ் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில், ஏப். 20 ஆம் தேதி மாவட்ட, வட்டார, நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ள குமரிக்கு வருகை தரும் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, சாலை விரிவாக்கத்தின் போது டெரிக் சந்திப்பில் இருந்து இந்திராகாந்தி சிலை எடுக்கப்பட்டு அதே இடத்தில் வைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தனர்.
அதன்படி அந்த சிலையை அமைக்காவிட்டால் ஏப். 10ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது, கூட்டுறவுச் சங்கத் தேர்தல் முறைகேடுகளை தடுக்கத் தவறிய அதிகாரிகளை கண்டிப்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டாரத் தலைவர் ஜெரால்டுகென்னடி, மாவட்டச் செயலர் மகேஷ்லாசர், கலைப்பிரிவு தலைவர் அலெக்ஸ், ஐஎன்டியூசி பொதுச்செயலர் குமரன், நிர்வாகிகள் சாமுவேல் சேகர், மாதவன்பிள்ளை, சாலமோன், முருகானந்தம், ராஜேந்திரன், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.