பேரிடர் காலங்களில் பொதுமக்களையும், மீனவர்களையும் மீட்பற்கு வசதியாக, கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்திடும் பணிகளைத் தொடங்க வேண்டும் என நுகர்வோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. சங்கத் தலைவர் எஸ். ஆர் ஸ்ரீராம் தலைமை வகித்தார்.கூட்டத்தில், பேரிடர் நிகழும் காலங்களில் மக்களை காப்பாற்றும் வகையில், குமரியில் துறைமுகத்தை விரைந்து அமைக்க வேண்டும்; இதன்மூலம் ஹெலிகாப்டர் தளம் அமைத்து மக்களை மீட்க வசதி கிடைக்கும்; மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் விதமாக குளச்சலில் ஒருங்கிணைந்த மீன்பிடித்துறைமுகம் அமைக்கப்பட வேண்டும்; இனயத்தில் கப்பல் படைத்தளமும், கடலோரக் காவல்படை பயிற்சி முகாமும் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சங்கப் புரவலர் பேராசிரியர் பீர்முகமது, பொன்னம்பலம், துணைத் தலைவர்கள் பேராசிரியர் சரோஜினிதேவி, சுவாமிதாஸ், செயலர் சந்திரமோகன், மகேஷ், சுதாகர், லதாரா"மசாமி, மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.