நாகர்கோவில் வடசேரியில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழை நீரை அகற்றும் பணியினை குமரி மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் ஆய்வு செய்தார்.
கஜா புயல் காரணமாக நாகர்கோவில் நகரில் வியாழக்கிழமை இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. நாகர்கோவில் வடசேரி சின்னராசிங்கன் தெருவில் உள்ள குடியிருப்புப்பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து தகவலறிந்த அதிமுக மாவட்டச் செயலர் எஸ்.ஏ. அசோகன் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். அப்போது அவரிடம் பொதுமக்கள், கழிவுநீர் ஓடையில் ஏற்பட்ட அடைப்பினால்தான் மழைநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கழிவு நீர் ஓடை அடைப்பை நீக்க நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் மழைநீர் வடியத்தொடங்கியது. மாவட்டச் செயலருடன் மாவட்டத் துணைச் செயலர் ராஜன், அணிச் செயலர்கள் ஜெயசீலன், சுந்தரம், நகரச் செயலர் சந்துரு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.