கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன் வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின், கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல்துறை, கதர் கிராமத்தொழில் வாரியம் ஆகியவற்றுக்குள்பட்ட 8 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், ஆவின், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட 3 சங்கங்களுக்கு போட்டி இல்லாததால் அதற்கான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆவின் நிர்வாகத்துக்கு எஸ்.ஏ. அசோகன் தலைமையிலான அணி தேர்வு பெற்றது. மற்ற 5 கூட்டுறவுச் சங்கங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
மீனவர் கூட்டுறவு இணையத்துக்கான தேர்தலில் அதிமுக சார்பில் திமிர்த்தியூஸ் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் கூட்டுறவு இணையத்தலைவர் சகாயம் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. மொத்தமுள்ள 105 வாக்குகளில் திமிர்த்தியூஸ் அணி 73 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. சகாயம் அணி 28 வாக்குகளும் பெற்றது. 4 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, அவர்கள் குமரி கிழக்குமாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர், அவர்கள் வடசேரி சந்திப்பில் உள்ள எம்ஜிஆர் சிலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மணல் சிற்பம் ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின்செல்வராஜ், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சேவியர்மனோகரன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், நகரப் பொறுப்பாளர் சந்துரு, கார்மல்நகர் தனீஷ், ரபீக், இ.என்.சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.