சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பதற்கு குமரி மகா சபா சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அதன் தலைவர் ராவின்சன்.
குமரி மகாசபாக் கூட்டம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. தலைவர் ராவின்சன் தலைமை வகித்தார். செயலர் ஜான்சன் வரவேற்றார். பொருளாளர் ஜெயநேசகுமார், கௌரவத் தலைவர்கள் பத்மநாபன், சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், குமரி மாவட்ட வளர்ச்சிக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டது.
பின்னர்தலைவர் ராவின்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: குமரி மகாசபா மேற்கொண்ட முயற்சியால் குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதில் மாவட்ட எம்.பி.க்கள் 2 பேரும் தீவிரமாக உள்ளனர்.
குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் சாமிதோப்பில் விமான நிலையம் அமைப்பதில் உறுதியாக இருக்கிறார். மேலும் குமரி மாவட்ட வளர்ச்சிப்பணிகளில் அவர் அதி தீவிர கவனம் எடுத்து செயல்படுகிறார். அதற்காக குமரி மகா சபா அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
விமான நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆறு உள்ளது. இதனால் ஓடு பாதைஅமைப்பதில் சிக்கல் வரும் என்று தெரிவித்தனர். இது போன்ற தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து குமரி மகாசபாவின் உறுப்பினர் பொறியாளர் அன்புசாமுவேல் இடத்தை பார்வையிட்டு சில விளக்கங்களை அளித்துள்ளார். மேலும் பொறியாளர் அன்புசாமுவேலும், விஜயகுமார் எம்.பி.யும் அடுத்த வாரத்தில் தில்லியில் மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சரை சந்திக்கின்றனர்.
பனைமரம் ஆராய்ச்சி மையம் குமரி மாவட்டத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பனைவிதையாக இல்லாமல் நாற்றுகள் மூலம் பனைமரத்தினை வளர்த்து நவீன தொழில்நுட்பத்தில் குறைந்த காலத்தில் பலன் தரும் மரங்களாக வளர்ப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தில்லியில் நெடுஞ்சாலைத்துறை, மனிதவளத்துறை, விமானத்துறை அமைச்சர்களை சந்திக்க குமரி மகா சார்பில் அக். 23, 24, 25 ஆகிய நாள்களில் ஒரு குழு தில்லி செல்கிறது என்றார்அவர்.
பேட்டியின்போது, துணைத்தலைவர்கள் ஜெசர்ஜெபநேசர், சந்திரமோகன், இணைச்செயலாளர்கள் பழனி, அலெக்சாண்டர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.