கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வங்கி ஊழியர் சாலையில் நிலை தடுமாறி விழுந்தபோது, லாரி மோதியதில் உயிரிழந்தார்.
தக்கலை அருகேயுள்ள பரைக்கோடு சாஸ்தான்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி தங்கத்துரை. இவரது மகன் ஜினித் (21). ஹோட்டல் மேலாண்மையியல் படித்த இவர், தக்கலையில் தனியார் வங்கியில் பணிசெய்து வந்தார். இவர், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை பெட்ரோல் நிரப்புவதற்காக மணலிக்கு வந்தாராம். பெட்ரோல் நிரப்பிய ஜினித், வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி ஜினித் மீது ஏறியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி. கார்த்திகேயன், காவல் ஆய்வாளர் அருள்பிரகாஷ் , போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். ஜினித்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து ரீத்தாபுரத்தை சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் ஜாண்பீட்டரை (43) கைது செய்து விசாரணை நடத்தினர்.