குடியரசு தினவிழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில், ஆட்சியர் பேசியது; கன்னியாகுமரி மாவட்டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் நிகழாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நாகர்கோவில் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். வருவாய்த்துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகள் மூலம், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகளை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாதவகையில், தீயணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் நடத்திட வேண்டும். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும் விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீநாத், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, சார் ஆட்சியர்கள் பத்மநாபபுரம் சரண்யா அரி, நாகர்கோவில் பவன்குமார்.க. கிரியப்பனவர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.