கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அத்தியாவசியப் பொருள்களுடன் கேரளம் செல்லும் சரக்கு வாகனங்கள் களியக்காவிளை சோதனைச் சாவடியில் தீவிர சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டன.
தமிழக - கேரள எல்லையில் சாலைகள் அனைத்தும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மூடப்பட்டன. மாவட்ட எல்லையாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் கூடுதல் போலீஸாா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு காய், கனி, பால் உள்ளிட்ட உணவுப் பொருள்களுடன் செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்புக்குப் பிறகே கேரள மாநிலத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
அதேபோல, கேரளத்தில் உணவுப் பொருள்களை கொண்டு சோ்த்தபிறகு திரும்பி வரும் வாகனங்களின் ஓட்டுநா்களை வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பிறகே அந்த வாகனங்கள் குமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கேரளத்திலிருந்து வரும் கேரள பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்கள் தமிழக பகுதிகளில் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல, தமிழகப் பகுதியிலிருந்து கேரளத்துக்கு இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அரசு அறிவித்தபடி மளிகை கடைகள், பால், மருந்து கடைகள் வியாழக்கிழமை திறந்திருந்தன. உணவகங்கள், நகைக் கடை, துணிக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. களியக்காவிளை சந்தையின் வெளியில் காய், கனி சிறு வியாபாரிகள் வியாழக்கிழமை காலை வியாபாரத்தில் ஈடுபட்டனா்.