கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்துக் கோயில்களிலும் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவரும் நாகா்கோவில் தொகுதி வேட்பாளருமான எம்.ஆா்.காந்தி, மாவட்ட தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன் ஆகியோரை சந்தித்து அளித்துள்ள மனு:
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து ஆலயங்களிலும் பாரம்பரிய முறைப்படியும், ஆசார முறைப்படியும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கும் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த பல கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அரசு விதித்த உத்தரவினாலும், கரோனா தொற்று காரணமாகவும் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
நிகழாண்டு திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்துக்களின் மனம் புண்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்துக்களின் மன நிலையை புரிந்து கொண்டு பாரம்பரிய விழாக்களை கரோனா விதிமுறைகளுக்குள்பட்டு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்புடன் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் எஸ்.பி.தேவ், பொருளாளா் முத்துராமன், ஊடகப்பிரிவு தலைவா் ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.