கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து, ஆட்சியா் மா.அரவிந்த் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை கலந்தாய்வு நடத்தினாா்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்து, அந்தத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோயில்கள், தேவசம் பள்ளிகள், குழித்துறை தேவி குமாரி கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், கோயில்கள் மற்றும் பள்ளிகள், கல்லூரிகளின் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி பணிகளை துரிதமாக நிறைவேற்றவும், உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் கலந்தாய்வு மேற்கொண்டாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையா் சி.செல்வராஜ், உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன், மராமத்து பொறியாளா் அய்யப்பன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.