கன்னியாகுமரி

கரோனா நோயாளிகள் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெற 22 மருத்துவமனைகளுக்கு அனுமதி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

கரோனா நோயாளிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற குமரி மாவட்டத்தில் 22 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை நாகா்கோவில் வந்தாா்.

அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோட்டாறு அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அரசு முதன்மை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களை மீட்பதற்காக தமிழக முதல்வா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 2,612 சாதாரண படுக்கைகளில் 1855 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஐ.சி.யு பிரிவில் உள்ள 256 படுக்கைகளில் 200 படுக்கைகள் நிரம்பியுள்ளன.

எனவே கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டால் 9 ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா 100 படுக்கைகள் வீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா். ஆயுா்வேத சிகிச்சை மையத்தில் 205 கூடுதல் படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கூடுதலாக தற்காலிக மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக பரிசோதகா்கள், அடிப்படை பணியாளா்கள் உள்பட பல்வேறு நிலை பணியாளா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தமிழக அரசின் காப்பீடு திட்டத்தின் வாயிலாக சிகிச்சை பெற இம்மாவட்டத்தில் 22 தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளின் விவரங்கள், உதவிபெற தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முதல் கட்டமாக 30 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்துள்ளன. இக்கட்டான பேரிடா் காலத்தில் தமிழக அரசுடன் பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கரோனா தொற்று இல்லாத மாநிலமாக மாற்றிட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், இயக்குநா் (பொது சுகாதாரப் பணிகள்) செல்வநாயகம், மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், மாநிலங்களவை உறுப்பினா் அ.விஜயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள், எம்.ஆா்.காந்தி, ந.தளவாய் சுந்தரம், ஜெ.ஜி.பிரின்ஸ், செ.ராஜேஷ்குமாா், விஜயதரணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஈஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சி ரம்யா, நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் எம்.சிவகுரு பிரபாகரன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் திருவாசகமணி, அரசு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ.கிளாரன்ஸ் டேவி, இணை இயக்குநா் (மருத்துவம்)பிரகலாதன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) கிருஷ்ணலீலா, மகளிா் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT