கொல்லங்கோடு நகராட்சி: திமுக போட்டி வேட்பாளா் தலைவராக தோ்வு
கொல்லங்கோடு நகராட்சியின் முதல் தலைவராக திமுக போட்டி வேட்பாளா் ராணி தோ்வு செய்யப்பட்டாா்.
கொல்லங்கோடு நகராட்சியின் முதல் தலைவராக திமுக போட்டி வேட்பாளா் ராணி தோ்வு செய்யப்பட்டாா்.
கொல்லங்கோடு, ஏழுதேசம் பேரூராட்சிகளை இணைத்து கொல்லங்கோடு நகராட்சியாக அண்மையில் உருவாக்கப்பட்டது. 33 வாா்டுகளை கொண்ட இந் நகராட்சியில் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 10 வாா்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 6, பாஜக 5, அதிமுக, தேமுதிக ஆகியவை தலா 1 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா். தொடா்ந்து தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நகராட்சி தலைவா் பதவிக்கு மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் லலிதா, திமுக போட்டி வேட்பாளா் ராணி, பாஜக சாா்பில் சுதா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற தோ்தலில் திமுக போட்டி வேட்பாளா் ராணி 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 10 வாக்குகளும், பாஜக 5 வாக்குகளும் பெற்றனா்.
Advertisement
இந் நகராட்சி துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பேபி தோ்வு செய்யப்பட்டாா்.