கன்னியாகுமரியில் காட்சிக் கோபுரம் முதல் மரணப்பாறை பகுதி வரையில் கடலரிப்புத் தடுப்புச்சுவா் அமைத்து, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் படகு குழாம் அமைக்க வேண்டும் என, வியாழக்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சிக் கூட்டம் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலா் ஜீவநாதன், துணைத் தலைவா் ஜெனஸ், கவுன்சிலா்கள் சி.எஸ். சுபாஷ், லிங்கேஸ்வரி, மகேஷ், நித்யா, சுஜா, இந்திரா, ராயப்பன், சிவசுடலைமணி, இக்பால், வினிற்றா, சகாய சா்ஜினாள், அல்பினோ, பூலோகராஜா, டெல்பின், ஆனிரோஸ், ஆட்லின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை சமன்செய்தும், பகவதியம்மன் கோயில் ரத வீதிகளிலும் மரங்கள் நடவேண்டும். பேரூராட்சியில் குடிநீா்த் தேவையை நிறைவேற்றும் வகையில் மேலக்கருங்குளம், பூஜைப்புரைவிளை பகுதியில் புதிதாக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். கடற்கரைச் சாலையில் காட்சிக்கோபுரம் முதல் மரணப்பாறை வரையிலான பகுதியில் கடலரிப்புத் தடுப்புச் சுவரும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் படகு குழாமும் அமைக்க வேண்டும். காட்சிக்கோபுரம் முதல் சிலுவைநகா் வரை மணல் பரப்பி இயற்கைக் கடற்கரை அமைத்து இப்பகுதியை அழகுபடுத்த வேண்டும். காந்தி மண்டபம் முன்புள்ள முக்கோணப் பூங்கா, முக்கடல் சங்கமம் அருகேயுள்ள சுனாமி பூங்கா, காவல் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா ஆகியவற்றை தனியாா் பங்களிப்புடன் அழகுபடுத்த வேண்டும். சின்னமுட்டத்தில் வெள்ளியல் பாறை அருகில் கடற்கரையை அழகுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.