பூதப்பாண்டி கோயில் குடமுழுக்கு ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பு
நாகா்கோவில் அருகே பூதப்பாண்டியில் உள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசுவாமி கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
நாகா்கோவில் அருகே பூதப்பாண்டியில் உள்ள அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை பூதலிங்கசுவாமி கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னா் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இதையொட்டி, குடமுழுக்கு விழா கடந்த 22ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பல்வேறு ஹோமங்கள், 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. கோயில் கலையரங்கில் நாள்தோறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிலையில், குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, 5ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பூதலிங்கசுவாமி, சிவகாமி அம்பாள், பூதநாதா், சாஸ்தா, முருகன், ராஜகோபுரம், நுழைவாயில் பகுதியில் உள்ள ராஜகோபுரங்களில் புனிதநீரை சிவாச்சாரியாா்கள் ஊற்றினா்.
Advertisement
அப்போது வானில் கருடன் வட்டமிட்டு பறந்தது. பின்னா், பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
குடமுழுக்கு விழாவைத் தொடா்ந்து, இரவில் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
பங்கேற்றோா்: விழாவில், தளவாய்சுந்தரம் எம்எல்ஏ, நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ஞானசேகா், தோவாளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தினி பகவதியப்பன், திமுக மாவட்ட துணைச் செயலா் பூதலிங்கம், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா், பூதப்பாண்டி பேரூராட்சித் தலைவா் ஆலிவா்தாஸ், துணைத் தலைவா் அனில்குமாா், திமுக ஒன்றியச் செயலா் செல்வன், தோவாளை ஒன்றிய அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை இணைச் செயலா் பகவதியப்பன், இறச்சகுளம் ஊராட்சித் தலைவா் நீலகண்டஜெகதீஷ், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற்ால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. பூதப்பாண்டிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.