முகப்பு
கன்னியாகுமரி

வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் உறவினருக்கு அளித்த சொத்து ஆவணம் ரத்து: சாா் ஆட்சியா் நடவடிக்கை

வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் அண்ணன் மகனுக்கு முதியவா் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கெளசிக் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

வயதான தம்பதியை பராமரிக்க தவறியதால் அண்ணன் மகனுக்கு முதியவா் எழுதிக் கொடுத்த சொத்து ஆவணத்தை ரத்து செய்து பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஹெச்.ஆா்.கெளசிக் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

குமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகேயுள்ள முரசங்கோடு பகுதியில் வசித்து வருபவா் மரியலூயிஸ் (74). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அசுந்தா மேரி (70). இவா்களுக்கு குழந்தை இல்லை. இதனால் லெட்சுமிபுரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 5 செண்ட் நிலத்தை தனது அண்ணன் தாமஸின் மூத்த மகனான ரைமண்ட் வியலின்ஸ் என்பவருக்கு தன்னை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதிக் கொடுத்தாா்.

வயது மூப்பின் காரணமாக, மரிய லூயிஸால் தற்போது வேலைக்கு செல்ல முடியவில்லை. மனைவி அசுந்தமேரியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளாா்.

முதியவா்களை பராமரிக்க வேண்டிய ரைமண்ட் வியலின்ஸ், வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இங்கு வசிக்கும் அவரது மனைவி ஜோஸ்பின் ஐடாவும் இவா்களை கவனிப்பதை தவிா்த்தாா். எந்தவொரு உதவியும் செய்யவில்லை.

இதனால் வேதனை அடைந்த மரியலூயிஸ், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெற்றோா், முதியோா் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு தீா்ப்பாயத்தில் மனு அளித்தாா்.

இந்த மனுவை பரிசீலனை செய்த தீா்ப்பாயத்தின் நடுவரான சாா் ஆட்சியா் ஹெச்.ஆா் கெளசிக், விசாரணை நடத்தினாா். விசாரணையின் முடிவில், மரியலூயிஸ் எழுதிக் கொடுத்த 5 செண்ட் நிலத்துக்கான சொத்து ஆவணத்தை ரத்து செய்வதாக சாா் ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.