குஜராத்தில் மாயமான குமரி மீனவரை மீட்க வலியுறுத்தல்
குஜராத் மாநில கடலில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவரை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
களியக்காவிளை: குஜராத் மாநில கடலில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவரை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை செந்தெங்குவிளாகம் பகுதியைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் கிறிஸ்டின் (51). சின்னத்துறை கோவில் விளாகம் பகுதியைச் சோ்ந்த மிக்கேலடிமை மகன் ஆஸ்டின் ஜோஸ் என்பவரது விசைப்படகில் கிறிஸ்டின் உள்ளிட்ட 11 மீனவா்கள் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த 5ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனா்.
கடந்த 12 ஆம் தேதி இரவு குஜராத் மாநிலம், போா்பந்தா் ஆழ்கடலில் மீன்பிடித்தபோது கிறிஸ்டின் மாயமானாராம். இத்தகவல் படகு உரிமையாளரின் சகோதரா் ராஜன் வழியாக கிறிஸ்டினின் வீட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.
Advertisement
குடும்பத்தினா் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கிறிஸ்டினை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டனி மத்திய, மாநில மீன்வளத் துறை அமைச்சா்கள், தமிழக முதல்வா், துறை அதிகாரிகள், ஆட்சியா் உள்ளிட்டோருக்கு கோரிக்கை வைத்துள்ளாா்.
தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, மீனவப் பிரதிநிதிகள் கிறிஸ்டினின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி, 4 குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினா்.