கன்னியாகுமரியில் புதுப்பொலிவுடன் குகன் படகு இயக்கம்
கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் குகன் படகு பழுது நீக்கப்பட்டு புதுப்பொலிவுடன் வியாழக்கிழமை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா். இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, கோடை விடுமுறை சீசனை முன்னிட்டு குகன் படகை ரூ. 35 லட்சத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக இப்படகு, படகுத் துறையிலிருந்து கடந்த பிப். 15ஆம் தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு படகை கரையேற்றி, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் கடந்த 15ஆம் தேதி நிறைவடைந்தன. இதையடுத்து, புதுப்பொலிவு பெற்ற படகு பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறைக்கு கொண்டுவரப்பட்டு, புதன்கிழமை வெள்ளோட்டம் நடைபெற்றது.
Advertisement
இந்நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு அந்தப் படகு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றது.